பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை திமுக கட்சியின் பிரமுகர் ஒருவர் தரக்குறைவாக பேசுவதாக கூறி வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை அசோக் நகரில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற  செய்தியாளர்களைத் திமுக பிரமுகர் ஒருவர் தரக்குறைவாக வசைபாடி மிரட்டல் விடுத்துள்ளது கண்டனத்திற்குரியது. அதிலும் ஆட்சியைப் பற்றி நல்ல செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டும் என்று திமுக பிரமுகர் வெளிப்படையாக நிர்பந்திப்பது ஒட்டுமொத்த திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது.

வடகிழக்குப் பருவ மழை துவங்கவிருக்கும் வேளையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விடுத்து, விளம்பரத்தில் ஈடுபடுவதோடு, உண்மையை வெளிபடுத்தும் செய்தியாளர்களுக்கு மிரட்டல் விடுத்து முடக்கப் பார்க்கும் திராவிட மாடல் அரசின் முயற்சிகள் இனியும் செல்லுபடியாகாது. திராவிட மாடலின் அடக்குமுறையை எதிர்த்து பத்திரிகை சுதந்திரத்திற்காக நமது பாஜக கட்சி வீதியில் இறங்கிப் போராடவும் தயங்காது என்று பதிவிட்டுள்ளார்.