தமிழகத்தில் அரசியல் மற்றும் திரையுலகை ஒரே நேரத்தில் கவனிக்க வைக்கும் நபராக திகழும் தவெக தலைவர் நடிகர் விஜய், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தனிப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டது நேற்று ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியத்தை அளித்தது.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பில் பங்கேற்ற விஜயின் தோற்றம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாக அரசியல் நிகழ்வுகள் தவிர வெளிப்படையாக அரிதாகவே தோன்றும் விஜய், இந்த நிகழ்வில் கலந்துகொண்டதால் ரசிகர்களின் கவனம் முழுவதும் அவர்மீதே திரும்பியது.

‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனர் மற்றும் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் டி.சிவா – அருணா தம்பதியரின் மகள் டாக்டர் தக்ஷிணா மற்றும் டாக்டர் சந்தீப் ஆகியோரின் திருமண வரவேற்பு நேற்று இரவு எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.

 

இந்த நிகழ்வில் நடிகர் விஜய் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். வெள்ளை பட்டு வேட்டி – சட்டை அணிந்து பாரம்பரிய லுக்கில் தோன்றிய அவர், விருந்தினர்களின் கவனத்தை ஈர்த்தார். அண்மையில் நடந்த அரசியல் பொதுக்கூட்டங்களில் காணப்பட்ட தோற்றத்தை விட, இந்நிகழ்வில் விஜய் மேலும் இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நடிகர்கள் கார்த்தி, சத்யராஜ், மீனா, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு உள்ளிட்ட பலர் நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இத்திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாத இறுதியில் மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.