
உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் குழந்தைகளுக்கான உறைவிட பள்ளியில், 9 மற்றும் 13 வயதுடைய ஆட்டிசம் உள்ள இரு சகோதரர்கள் ஹாஸ்டல் வார்டனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். மே 30-ஆம் தேதி சிறுவர்களின் தாய் பள்ளிக்கு நேரில் சென்று சந்தித்தபோது, சிறுவர்கள் அழுது கொண்டே ஹாஸ்டல் வார்டன் அடித்து, சிகரெட்டால் சூடு வைத்து பாலியல் தொந்தரவு அளித்ததை தெரிவித்துள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஹாஸ்டல் வார்டனான மோனு பால் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரை போலீசார் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் பள்ளியின் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் நலக் குழுவின் மொழிபெயர்ப்பாளர்கள் மூலமாக, பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் கூடுதல் தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன.
இந்த பள்ளி மூன்று மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது என்றும், இது சட்டப்படி பதிவு செய்யப்படாத பள்ளி என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். சமூக நலத்துறையினர் பள்ளியின் அனுமதிப்பத்திரம் மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஹாஸ்டலில் நான்கு சிறுவர்கள் குற்றவாளியின் படுக்கைக்கு அருகில் ஒரே அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என குழந்தைகள் உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க, சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகளுக்கான பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள், அனைத்து ஊழியர்களின் பின்னணி சரிபார்ப்பு, மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளாக இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.