
உத்தரப்பிரதேச மாநிலத்தின் தேவ்ரியா மாவட்டத்தில், 14 வயது சிறுமி பிரியான்ஷி பாண்டே திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியை தனது குடும்பத்தினருடன் பார்த்துக்கொண்டு இருந்தபோது, அவர் திடீரென மயக்கமடைந்து நிலைகுலைந்ததாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதின்படி, அவரது மரணத்திற்குக் காரணம் மாரடைப்பு (heart attack) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் மரணம் அவரது குடும்பத்தினரையும் சமூகத்தையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால் விராட் கோலி அவுட் ஆனதால் பிரியான்ஷி இறக்கவில்லை என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். அதாவது சிறுமியின் தந்தை அஜய் பாண்டே, கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சை பார்த்த பிறகு கடைக்கு சென்றதாகவும், இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியதும் அவரது மகள் குடும்பத்தினருடன் போட்டியை பார்த்ததாகவும் கூறினார். அதன்பிறகு, அவர் திடீரென மயங்கி விழுந்ததால், குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவர்கள் அங்கு அவரை இறந்து விட்டதாக அறிவித்தனர்.
அஜய் பாண்டே, தனது மகளின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை செய்ய மறுத்துவிட்டு, நேரடியாக வீட்டிற்கு கொண்டு வந்து இறுதி சடங்குகளை மேற்கொண்டார். மேலும், அவரது மகளின் மரணம் கிரிக்கெட் போட்டியுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், இது அவருக்கு ஏற்கனவே இருந்த உடல்நல பிரச்சனையின் விளைவாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். இதனால், அவரது திடீர் மரணத்திற்கு கிரிக்கெட் போட்டி ஒரு காரணம் என கூறுவது தவறான தகவல் எனவும் அவர் வலியுறுத்தினார்.