சென்னை மாவட்டம் வியாசர்பாடியில் நேற்று முன்தினம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்த 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. எனவே அவர்களது உடமைகளை சோதனை செய்தபோது, அவர்களிடம் டைடல் என்னும் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மாத்திரைகளை போதைப் பொருளாக பயன்படுத்திவந்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் கடத்தலில் ஈடுபட்ட மாதவரத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன்(24), மணலி சுல்தான் அலாவுதீன்(34), வியாசர்பாடி கார்த்திகேயன்(23), ரூபன்(24), கவுதம்(21) மற்றும் ஐஸ்வர்யா(25) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த 300 கிராம் கஞ்சாவும், 570 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.