கேரளாவின் பத்தனம்திட்டா  மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர் பகுதியில் கடந்த 29-ஆம் தேதி ஞானஸ்தான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உணவு சாப்பிட்ட 100-க்கும்  மேற்பட்டவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு உடல்நல குறைவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விழாவில் உணவு சப்ளை செய்த கேட்டரிங் சர்வீஸ் ஏஜென்சி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் இருந்து உணவு மாதிரிகளை சேகரித்து போலீசார் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கேட்டரிங் நிறுவனம் மீது இந்திய தண்டனைச் சட்டம் 268, 296 மற்றும் 272 போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  விசாரணை நடத்தி விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உணவு பாதுகாப்பு ஆணையருக்கு கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.