மகளிர் முன்னேற்றத்திற்காக சிறப்பான பணியாற்றும் சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை ஊக்குவிக்க தமிழக அரசு வரவேற்கத்தக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பெண்களின் நலனுக்காக உழைக்கும் சமூக சேவகருக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் விருது மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் சிறந்த சமூக சேவகருக்கு ரூ.50,000 மற்றும் சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு ரூ.1,00,000 ரொக்க பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், பெண்களின் முன்னேற்றத்திற்காக குறைந்தது 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியிருக்க வேண்டும்.

மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் மகளிருக்கு சாதனைகள் பெற்றுத் தந்தவர்கள், மகளிர் கல்வி, தொழில், உரிமை போன்ற பகுதிகளில் முன்னேற்றத்துக்கு வழிவகுத்தவர்கள் இவ்விருதுக்குத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவர். தொண்டு நிறுவனங்கள் அரசு அங்கீகாரம் பெற்றவையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

விண்ணப்பதாரர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை 12.06.2025க்குள் பதிவுசெய்ய வேண்டும். அதன்பின், தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள முழுமையான கையேடு மூன்று நகல்களுடன், மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்று, சிங்கார வேலனார் மாளிகை, 8வது தளத்தில் அமைந்துள்ள சமூக நல அலுவலகத்தில் 20.06.2025 மாலை 4.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.