
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த முதிய தம்பதியை அடித்துக் கொன்று விட்டு 15 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஈரோடு மாவட்டம் பல்லடத்திலும் மூன்று பேரை அடித்துக் கொலை செய்துவிட்டு தங்க நகைகள் திருடப்பட்டது. அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் திமுக அரசை விளாசி வருகிறார்கள். அந்த வகையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த ஒரு வயதான தம்பதியினர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள, செய்தியை அறிந்து கடும் அதிர்ச்சியுற்றேன்.
தமிழகத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை வழக்கிலேயே இன்னும் எவ்வித தடயத்தையும் திமுக அரசு கண்டுபிடிக்காத நிலையில் கொங்குப் பகுதியில் மீண்டும் மீண்டும் அரங்கேறி வரும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் நம்மை அச்சத்தில் உறைய வைப்பதோடு, திராவிட மாடல் ஆட்சியில் சிறு குழந்தைகள் முதல் வயதானோர் வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்ற கசப்பான உண்மையையும் நமக்கு உணர்த்துகிறது.
எனவே, தமிழகத்தில் இத்தனை துணிச்சலாக அதிகரித்து வரும் கொலை, கொள்ளைக் குற்றங்களால் பொதுமக்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீதான நம்பிக்கை முற்றிலுமாக சிதைந்து விடும் அபாயம் உள்ளதால், இந்தக் கொடும் குற்றத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து கைது செய்வதுடன், சீர்கெட்டுப் போய் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கையும் தாமதிக்காமல் நெறிப்படுத்த வேண்டுமென தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.-