
புதுக்கோட்டை மாவட்டம் போஸ் நகரைச் சேர்ந்த ஈஸ்வரன் – செல்வி தம்பதியரின் மகன் தினேஷ்குமார் (23), கடந்த மார்ச் 9-ஆம் தேதி தனது இரண்டு நண்பர்களுடன் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த முகிலனுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அரிவாளால் முகிலனை தாக்க, அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இது குறித்து முகிலன் போலீசில் புகார் அளித்ததின் அடிப்படையில், தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறை தண்டனை முடிந்து தினேஷ் சமீபத்தில் வெளியே வந்தார். இதனைத் தெரிந்துகொண்ட முகிலன், பழிவாங்கும் நோக்கில் தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தினேஷை தாக்க திட்டமிட்டார்.
இந்த சூழலில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முகிலன் மற்றும் அவரது நண்பர்கள், அரிவாளால் தினேஷின் தலையை வெட்டி, அருகிலுள்ள காளாக் குளத்தில் சடலத்தை வீசி விட்டுச் சென்றுள்ளனர். தினேஷின் ரத்தம் குளத்தில் கலந்ததால் நீரின் நிறம் மாறியதை பார்த்த மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்பு துறையினரின் உதவியுடன் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகிலன் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் தற்போது போலீசில் சரணடைந்துள்ளனர். மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.