
உத்தரபிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் உள்ள புகழ்பெற்ற தாக்கூர் பாங்கே பிஹாரி கோவிலில் வந்திருந்த பக்தர் அபிஷேக் அகர்வால் என்பவர் தனது மனைவியுடன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ஒரு குரங்கு, அவரது மனைவியின் கைப்பையை பறித்து ஓடியது. அந்தப் பையில் ₹20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்ததால் தம்பதியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக பக்தர்கள், பொதுமக்கள் குரங்கிடமிருந்து பையை மீட்க முயன்றும் அது பயனளிக்கவில்லை. உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பல மணி நேரம் தொடர்ந்து தேடி, இறுதியாக அந்த பணப்பையை அருகிலுள்ள ஒரு புதரில் இருந்து கண்டுபிடித்தனர். அந்தப் பை முழுமையாக மீட்கப்பட்டதும் அதில் உள்ள நகைகள் சேதமின்றி இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து சதார் வட்ட அதிகாரி சந்தீப் குமார் கூறுகையில், “குரங்கு பறித்த பையை போலீசார் சீராக தேடினர். பின்னர் அதை மீட்டு, அதில் இருந்த அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதி செய்து, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தோம்” என்றார். இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையின் ச உடனடி நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுபோன்ற குரங்கு சம்பவங்கள் பிருந்தாவனில் அடிக்கடி நடைபெறுவதாகவும், பக்தர்கள் இதற்கு முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வரவேண்டும் என்றும் போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே, கடந்த மார்ச்சில் ஒரு குரங்கு, விலை உயர்ந்த Samsung S25 Ultra மொபைலை ஒரு மாங்காய் பானத்துடன் பரிமாறிக்கொண்ட வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இது போன்ற சம்பவங்கள், பிருந்தாவனில் சுற்றுலா வருவோருக்கு வியப்பையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தி வருகின்றன.