ஆந்திரப் பிரதேசம் கர்னூல் அருகே தேசிய நெடுஞ்சாலை 44-ல் ஏற்பட்ட பேருந்து தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பரவலான துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்தது. ஹைதராபாத் – பெங்களூரு நோக்கிச் சென்ற தனியார் ஸ்லீப்பர் பேருந்து, சாலையில் விழுந்திருந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் பேருந்து தீப்பிடித்து முழுமையாக எரிந்தது.

விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டிய பஞ்சால சிவ சங்கர் (20) என்ற இளைஞர் குடிபோதையில் இருந்ததாகவும், கட்டுப்பாட்டை இழந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரியவந்துள்ளது. அவர் மற்றும் நண்பர் எரிசாமி இருவரும் விபத்துக்கு முன்பு அதிகாலை 2 மணியளவில் அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன.

 

இந்த விபத்தில் 19 பேருந்து பயணிகள் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் சிந்தியதால் தீ வேகமாக பரவியதாக போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தைப் பற்றி ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகள். அவர்களின் செயல்கள் நமது சாலைகளில் நடக்கும் பயங்கரவாதச் செயல்களுக்குச் சமம். இது ஒரு தடுக்கக்கூடிய படுகொலை. அலட்சியத்தின் காரணமாக முழு குடும்பங்களும் அழிந்துவிட்டன,” எனக் கூறினார்.

மேலும் அவர், “ஹைதராபாத் காவல்துறை மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எவ்வித இரக்கமும் காட்டாது. இப்படிச் சட்டத்தை மீறுவோர் சட்டத்தின் முழு சக்தியையும் எதிர்கொள்வார்கள்,” என்று எச்சரித்தார். சம்பவம் தொடர்பாக கர்னூல் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.