உத்தரபிரதேசம் ஜான்சி மாவட்டத்தில் ஒரு திருமண விழாவில் ஏற்பட்ட சண்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருமண விழாவின் போது மேடையில் இருந்த மணமக்களுக்காக வைக்கப்பட்ட கூலர் காற்று நன்றாக வரவில்லை. காரணம், சில விருந்தினர்கள் கூலரின் முன் அமர்ந்திருந்ததால் காற்று சரியாக வரவில்லை. இதைக் கவனித்த மணமகள் தரப்பினர் அந்த விருந்தினர்களை  அங்கிருந்து நகருமாறு கூறினர். இதையடுத்து இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அது உடனடியாக கைகலப்பாக மாறியது.

சண்டை கடுமையாகி, ஒருவரை ஒருவர் குத்தியும், உதைத்தும், நாற்காலிகள் மற்றும் பாத்திரங்களை வீசியும் தாக்கினார்கள். திருமணத்திற்கு வந்த மற்ற விருந்தினர்கள் அலறி ஓடினர். திருமண வீடு சில நிமிடங்களில் போர்க்களமாக மாறியது. உறவினர்கள் தங்கள் உணவை பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேற நேர்ந்தது. இந்த சண்டையின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் ஜான்சியில் நடந்தது என்றும், அந்த வீடியோவில் நாற்காலிகள் பறந்தும், மக்கள் ஒருவரை ஒருவர் அடித்தும் இருந்த காட்சிகள் தெளிவாக தெரிகின்றன. இந்த வீடியோவை @SachinGuptaUP என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ளது. இது ஏற்கனவே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

 

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வேடிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர், “கூலருக்காக இப்படி சண்டை போட்டாங்களே, ஏசி இருந்திருந்தா என்ன ஆயிருக்கும்?” என கேள்வி எழுப்ப, மற்றொருவர் “இதையெல்லாம் தவிர்க்க, குளிர்காலத்தில் திருமணம் செஞ்சுருங்க” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதேபோன்று பலரும் நகைச்சுவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.