டெல்லியின் கலிந்தி குஞ்ச் பகுதியில் நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 22 வயது மாற்றுத்திறனாளியான பெண் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது பெற்றோருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ராஜ்பால் என்ற நபரால் கடத்தப்பட்டார்.

அந்த பெண்ணுக்கு பேசவும், கேட்கவும் முடியாத நிலை இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  அந்தப் பெண் கடத்தப்பட்ட அதே தினத்தில், அதே தெருவில் உள்ள ஒரு காலியான சேரியில் அந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்துக்குப் பின், போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், ராஜ்பால் என்பவர் அந்த பெண்ணின் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில், தனது தோளில் தூக்கிச் செல்வது போல காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, போலீசார் விசாரணை குழுக்களை அமைத்து, குற்றவாளியை வலைவீசி தேடினர்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை கலிந்தி குஞ்ச் பகுதியில் நடந்த என்கவுண்டரில், ராஜ்பால் தப்பிக்க முயன்று போலீசாரை நோக்கி இரு சுற்றுகள் துப்பாக்கியால் சுட்டார். இதனால் தற்காப்புக்காக அவரை போலீசார் சுட்டதில் அவரது வலது கால் காயமடைந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. முதற்கட்ட அறிக்கையில், கழுத்தை நெரித்ததால் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதி அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

போலீசார் கொலை மற்றும் கடத்தல் வழக்காக பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராஜ்பாலிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் குற்றம் நடந்தபோது அவர் அணிந்திருந்த உடைகள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.