
ஆந்திர மாநிலத்தின் சத்யசாய் மாவட்டத்தில் மனைவியின் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் மஞ்சுநாதா (40) கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுநாதா, தனது மனைவி யமுனா மற்றும் இரு பிள்ளைகளுடன் பெனுகொண்டா பகுதியில் குடியேறி வாழ்ந்துவரும் நிலையில், யமுனாவுக்கு தனது பழைய பகுதியில் வசிக்கும் சித்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
இந்த விவகாரம் தெரிய வந்த பின் மஞ்சுநாதா தனது மனைவியை கண்டித்து, அவருடன் உறவைத் துண்டித்தார். இதையடுத்து, கள்ளக்காதலுக்கு தடையாக உள்ள மஞ்சுநாதாவை கொலை செய்ய திட்டமிட்டார்.
யமுனா, சித்து, சித்துவின் நண்பர்கள் நூர்முகமது, மதன்மோகன், பிட்டி ஆகியோருடன் சேர்ந்து கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி மஞ்சுநாதாவை மதுபார்ட்டிக்கு அழைத்து சென்று, அதிக மது குடிக்க வைத்தனர்.
பின்னர் மதுபோதையில் இருந்த அவரை கழுத்தை நெரித்து கொன்று, அவரது சடலத்தை குளத்தில் வீசியுள்ளனர். யமுனா பின்னர் கணவர் காணவில்லை என கூறி நாடகமாடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் மஞ்சுநாதாவின் பெற்றோர் யமுனாவை சந்தேகித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் பிரேத பரிசோதனை செய்ததில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சித்துவின் மூன்று நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். மனைவி யமுனா மற்றும் காதலன் சித்து தலைமறைவில் உள்ள நிலையில், போலீசார் அவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.