
திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள ஜோயா நகர் பகுதியை சேர்ந்தவர் சுபர்ணா பால். இவருடைய கணவர் காணாமல் போனதையடுத்து 9 வயது மகனோடு தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் சமபவத்தன்று தன்னுடைய மகன் கழுத்தை நெரித்து கொலை செய்து அவருடைய பிணத்துக்கு பக்கத்திலேயே பிரம்மை பிடித்தது போல அமர்ந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் தானே தன்னுடைய மகனை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார் . அதில் தன்னுடைய சொல் பேச்சு மகன் கேட்பதில்லை என்றும் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்பதால் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வீட்டில் இருந்த பணத்தை தன்னுடைய மகன் திருடியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.