
பீகார் மாநிலம் கோபால்கஞ்சில் அமைந்துள்ள சிறார் நீதி வாரிய நீதிமன்றம், மதுபானக் கடத்தலில் ஈடுபட்ட சிறுவனை சிறையில் அடைக்க வேண்டியதற்குப் பதிலாக, சீர்திருத்த வழியைத் தேர்ந்தெடுத்து, ஒரு புதிய உதாரணத்தை அமைத்துள்ளது.
நீதிபதி, குற்றப் பாதையில் செல்லும் சிறார்களை திருத்த ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறி, அந்த சிறுவனுக்கு ஒரு வாரம் கோவிலை சுத்தம் செய்யும் தண்டனை வழங்கினார்.
அந்த சிறுவன் கடந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் மதுபானக் கடத்தலில் பிடிபட்டார். அவருடன் இருந்த மற்றொரு சந்தேக நபர் சிறைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் குறைந்த வயதுடைய இந்த சிறுவனின் வழக்கு சிறார் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
காவல்துறை மற்றும் மறுபக்க வாதங்களை கேட்ட நீதிபதி, அந்த சிறுவன் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதையும், பணத்துக்காகவே இந்த செயலில் ஈடுபட்டத்தை கருத்தில் கொண்டு, தீர்ப்பு வழங்கினார்.
தண்டனைக்குப் பிறகு, சிறுவன் இனி எந்த தவறும் செய்யமாட்டேன் என்றும், நேர்மையான வாழ்க்கையைத் தொடர விரும்புகிறேன் என்றும் உறுதி அளித்துள்ளார். கோவில் பணி தொடர்பாக, தாவே கோயிலின் பூசாரி சஞ்சய் பாண்டே, “வாரியத்திலிருந்து கடிதம் வந்துள்ளது.
அந்த சிறுவன் கோவிலுக்கு வந்து துப்புரவு பணியில் ஈடுபடுவார். இது அவரை நல்ல பாதைக்கு கொண்டு வரும்” எனக் கூறினார். மனிதநேயத்தின் அடிப்படையில் எடுத்த இந்த தீர்ப்பு, நீதித்துறையின் சமூகப் பொறுப்பை உணர்த்தும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.