
கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மாபுரம் ஊராட்சி நேருபுறம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி(45). இவர் கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி கவிதா(44). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு சாதிகா, வைத்தீஸ்வரி, என்ற மகள்களும் சூர்யா(23) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் ரங்கசாமிக்கும் தர்மபுரியை சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற ரங்கசாமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. நேற்று முன்தினம் கவிதா அருகே இருக்கும் மார்க்கெட்டுக்கு சென்று வருவதாக கூறினார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சூர்யாவும் அவரது தங்கை சாதிகாவும் சாப்பிட்டுவிட்டு தாழ்ப்பாள் போடாமல் படுத்து தூங்கிவிட்டனர். அன்று இரவு 11 மணிக்கு வீட்டு மாடியில் ரங்கசாமி அலறும் சத்தம் கேட்டது.
இதனால் சூர்யாவும் சாதிகாவும் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ பற்றி எரிந்த நிலையில் ரங்கசாமி உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதே நேரம் பதற்றத்துடன் கவிதா மாடியில் இருந்து கீழே இறங்கி ஓடியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரங்கசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் கவிதா தனது கணவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.