உத்தரப்பிரதேச மாநிலம் பல்லா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோஷன் நகரில், திருமணமாகிய தன்னு என்ற பெண் திடீரென காணாமல் போன வழக்கு, கொலை வழக்காக மாறியிருக்கிறது. ஏப்ரல் 24 ஆம் தேதி பல்லா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் தன்னுவின் மாமனார் பூப் சிங் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரம்ப விசாரணையில், பூப் சிங் ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு தன்னுவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன், அவரது உடலை தெருவில் குழி தோண்டி புதைத்ததாக தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலை நடக்கும் நேரத்தில், தன்னுவின் கணவர் அருண் வெளியே இருந்தார் என்றும், மாமியார் சோனியா திருமண விழாவுக்கு சென்றிருந்ததாகவும் கூறப்படுகிறது. பூப் சிங்கின் மகள் காஜல், தரை தளத்தில் கூலர் அறையில் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, பூப் சிங் குற்றத்தைச் செய்ததாகவும், தன்னுவின் உடலை யாரும் பார்க்காத நேரத்தில்  இடமாற்றியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால்,  முதியவரான பூப் சிங் அந்த உடலை சத்தம் இல்லாமல் முதல் மாடியில் இருந்து குழிக்குள் எடுத்துச் செல்வது எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுகிறது.

இவ்வழக்கில் பூப் சிங் மட்டுமின்றி, அவரது மகன் அருண் மற்றும் மனைவி சோனியா மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏனெனில் தன்னுவின் காணாமற்போனதைத் தொடர்ந்து, அவர்கள்  யாரும் அவரைப் பற்றி விசாரிக்கவில்லை என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும், தன்னுவின் தந்தை ஹக்கீம் முன்னதாகவே தனது மகளுக்கு மாமியார் தரப்பில் இருந்து வரதட்சணை தொல்லை இருந்ததாகவும், கொலை திட்டமிட்டது எனத் தெரிவித்திருந்தார்.

தன்னு மற்றும் அருண் ஜூன் 2023 இல் திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. ஆனால் திருமணத்திலிருந்தே இருவருக்குள்ளும் பிரச்சினைகள் தொடர்ந்துள்ளன. இதன் பின்னணியிலும் தன்னுவின் மரணம் தொடர்பு கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏசிபி சராய் ராஜேஷ் குமார் கூறியதாவது, அனைத்து புள்ளிகளையும் ஆய்வு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலதிக தகவல்களை வெளிப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

தன்னுவின் காணாமற்போன தகவலை வெளியிடுவதற்காக அவரது கணவர் அருண், சுவரொட்டி ஒன்றை தயாரித்து அதில் புகைப்படம், பெயர், தொடர்பு எண் மற்றும் தகவல் தருபவருக்கு பரிசு என அறிவித்திருந்தார். ஆனால் தற்போது இது போலீசாரிடம் மற்றொரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது. தன்னுவின் உடல் அழுகிய நிலையில் தோண்டப்பட்ட குழியில் இருந்து மீட்கப்பட்டது. தற்போது பூப் சிங் இரண்டு நாள் காவலில் வைத்து விசாரணை செய்யப்படுகிறார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.