
வங்காளதேசம் நாடு கடந்த 1971-ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதால் தனி நாடாக உருவானது. அப்போது போராடிய சுதந்திர வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த
2018 ஆம் ஆண்டு மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதன் பின் அந்த 30 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மீண்டும் அந்த இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தப் போவதாக அரசு அறிவித்தது.
இதனால் வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் சுமார் 103 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு ஒரு சிறைச்சாலைக்கு கலவரக்காரர்கள் தீ வைத்ததால் சுமார் 800 கைதிகள் தப்பி ஓடிவிட்டனர். இதனால் தற்போது வங்காளதேசத்தில் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்திய மாணவர்கள் ஆயிரம் பேர் பத்திரமாக நாட்டிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அதன் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களையும் மீட்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. மேலும் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கலவரக்காரர்கள் வெளியே வந்தால் அவர்களை பார்த்தவுடன் சுட அரசு உத்தரவிட்டுள்ளது.