
கர்நாடக அரசின் புதிய நடவடிக்கையின்படி, புகையிலை பொருட்கள் வாங்கும் குறைந்தபட்ச வயது வரம்பு 18-லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஹூக்கா பார்களுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு எடுக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் புகையிலையை மெல்லுதல், துப்புதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகள் உள்ள இடங்களில், அதாவது கல்வி நிறுவனங்களை சுற்றியுள்ள 100 மீட்டர் பரப்பளவில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய முடியாது என சட்டம் முற்றுப் புள்ளி வைத்துள்ளது.
புகையிலை வாங்கும் வயதை மீறி விற்பனை செய்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல, ஹூக்கா பார்களை நடத்தினால் 1 முதல் 3 ஆண்டு வரை சிறைத்தண்டனையும், ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாகவே இந்த தடை இருந்தாலும், சில ஹூக்கா பார்கள் சட்டவிரோதமாக இயங்கி வந்ததாகவும், தற்போது அதனை முற்றாக கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பும் இளைஞர்களை போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து விலக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இ-சிகரெட், ஹூக்கா, சிகரெட் போன்றவற்றை உலகம் முழுவதும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இத்தருணத்தில், கர்நாடக அரசு எடுத்துள்ள இந்த முடிவு சமூக நலனுக்கான ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது.