நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜும் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கார்த்தி ஆகிய இருவரும் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் நாகூரில் இருந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கூத்தூர் பகுதியைச் சேர்ந்த வினோத் பாபுவும், அவரது மனைவி சிந்துவும் எதிரே வந்து கொண்டிருந்தனர்.

ஆழியூர் பிரிவு சாலையில் ஆனந்தராஜ், கார்த்தி சென்ற இருசக்கர வாகனமும், வினோத் பாபுவும் அவரது மனைவி சிந்து சென்ற இருசக்கர வாகனமும் எதிரெதிரே மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து கார்த்தி மற்றும் வினோத்பாபு இருவரும் சாலையில் தவறி விழுந்தனர். அப்போது இருவரின் மீதும் லாரி ஏறியது.

இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனந்தராஜ் மற்றும் அவரது மனைவி சிந்து இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆனந்தராஜ் உயிரிழந்தார்.

சிந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த கார்த்திக் மற்றும் வினோத் பாபு இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.