மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாரை  அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட சாவா திரைப்படம் தொடர்பான விவாதம் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபு ஹாஸ்மி, முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் நடவடிக்கைகளை பாராட்டியதுடன், அவரது புகழ் வாழ்க என கோஷமிட்டார். இது பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. இதனால்மார்ச் 26ஆம் தேதி வரை அவர் சட்டப்பேரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து, மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

அதன்படி அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டுமென கோரிக்கையை வலியுறுத்தி விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) மற்றும் பஜ்ரங்க்தளம் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுத்தன. விஎச்பி மாநிலச் செயலாளர் கிஷோர் சவான், பஜ்ரங்க்தள மாநில ஒருங்கிணைப்பாளர் நிதின் மகாஜன் ஆகியோர், “அயோத்தியில் பாபர் மசூதியை கரசேவையில் இடித்தது போலவே, அவுரங்கசீப் சமாதியையும் அகற்றுவோம்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் போராட்டங்களின் போது நாக்பூரில் இரு பிரிவினரிடையே கடுமையான மோதல் வெடித்தது. வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதுடன், போலீஸாரை நோக்கி கற்கள் வீசப்பட்டதால் பதற்றம் நிலவியது. இதில் 15 போலீஸார் உட்பட 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் 17 பேரை கைது செய்துள்ளனர். மேலும் வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில் கூடுதல் போலீசாரை நாக்பூரில் குவித்துள்ளனர். இந்து அமைப்புகளின் போராட்டத்திற்கு சிவசேனாவின் இரு பிரிவுகளும் (ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே) மற்றும் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி இந்தக் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், அவுரங்கசீப் சமாதிக்கு தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்ததாகவும் சமூக வலைதளத்தில் செய்தி பரவியதால் அது இஸ்லாமியர்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கி போராட்டம் வன்முறையாக மாறி உள்ளது. மேலும் இதன் காரணமாக தற்போது நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.