
மும்பையில் ஓடிக்கொண்டிருந்த மகளிர் ரயில் பெட்டியில், காலி மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மச்ஜித் நிலையத்தை கடந்த பிறகு, 8:30 PM டிட்வாலா லோக்கல் ரயிலின் மகளிர் பெட்டிக்குள், எதிரே சென்ற மற்றொரு ரயிலிலிருந்து மதுபாட்டில் வீசப்பட்டது. பாட்டில் பெட்டிக்குள் உள்ள விசிறியில் மோதி துண்டுகளாக உடைந்து விழுந்தது. இந்தத் துண்டுகள், பெட்டிக்குள் இருந்த 18 வயது மாணவி அமினா கானை தாக்கியது. அதிர்ஷ்டவசமாக, அவர் பெருமளவு காயமடையவில்லை என்றாலும், பயணிகள் அனைவரும் மிகுந்த பயத்தில் உறைந்துவிட்டனர்.
இச்சம்பவம் குறித்து 29 வயதான பயணி பிரணவி பில்லா உடைந்த பாட்டிலை எடுத்துக்கொண்டு பெட்டியில் இருந்த பெண் காவலர்களிடம் புகார் அளிக்க முனைந்தார். ஆனால், காவலர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். “நான் அவர்களிடம் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டேன், ஆனால் அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை” என அவர் கண்டனம் தெரிவித்தார். இது மகளிர் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளது. பொதுப்போக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை கருத்தில் கொண்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#WATCH | #Mumbai: Alcohol Bottle Thrown Inside Train’s Ladies Compartment Near Masjid Station, Hits 18-Year-Old#MumbaiLocal #LocalTrain #MumbaiNews pic.twitter.com/wLiyige3th
— Free Press Journal (@fpjindia) March 11, 2025