புனேயில் உள்ள ஒரு இனிப்புக்கடையில், சமோசா வாங்குவதில் ஏற்பட்ட வரிசைத் தகராறு முற்றியதில் ஊழியர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷிரூர் தாலுகா, கரேகாவ் கிராமத்தில் உள்ள ‘சிவசக்தி ஸ்வீட் ஹோம்’ என்ற கடையில்  மாலை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அங்கு பணிபுரியும் ராஜு லாபுராம் தேவாசி (26) என்பவர் பணியில் இருந்தபோது, கடைக்கு வந்த ஈஸ்வர் ரங்கநாத் நாவலே மற்றும் சாய் லட்சுமணன் நாவலே ஆகிய இருவரும், தாங்கள் பணம் செலுத்திவிட்டு நீண்ட நேரம் காத்திருந்தும் தங்களுக்கு சமோசா வழங்காமல், மற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தச் சிறு வாக்குவாதம் சட்டென்று கைகலப்பாக மாறியதில், அந்த இருவரும் ஊழியரைத் தாக்கி, கடுமையான வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவி வருவதைக் கண்டு, மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இது தொடர்பாகக் கடை ஊழியர் அளித்த புகாரின் பேரில், ரஞ்சன்கான் எம்.ஐ.டி.சி காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்து, அந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.

ஒரு சமோசா தட்டுக்காக நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம், தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளதுடன், சில்லறைத் தகராறுகள் எப்படி வன்முறையாக மாறுகின்றன என்பதற்கு ஒரு சான்றாகப் பார்க்கப்படுகிறது. காவல்துறை இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.