குஜராத் மாநிலம் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள பட்டி அரசு மருத்துவமனையில் ஒருவர் உயிரிழந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், மரணமடைந்த நபரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உறவினர்களின் கோபம் நியாயமானதுதான் என்றாலும், அதற்குரிய ஆதரவு அளிக்காமல் காவல்துறையினர் திடீரென வன்முறையில் இறங்கினர்.

போராட்டம் நடத்திக் கொண்டிருந்த குடும்பத்தினரை காவல்துறையினர் அறைந்தும், தள்ளியும், இழுத்தும் தாக்கினர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மக்களின் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையில் உள்ள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் நேரடியாக இந்த தாக்குதல்களில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சடலத்திற்கு அருகில் அழுதுகொண்டிருக்கும் உறவினரை, போலீசார் காட்டுமிராண்டித்தனமாக இழுத்து செல்லும் காட்சி மக்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது. அரசு தரப்பிலும் இதற்கான நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்பதையும் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.