கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில், புலி மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி நுழைந்து கால்நடைகளைத் தாக்கி வருகின்றன. சாமராஜா நகர் மாவட்டம் பொம்மலாபுராவில், புலி தாக்குதலில் ஒரு கன்று கொல்லப்பட்ட சம்பவம், அப்பகுதி விவசாயிகளை கடும் ஆத்திரமடையச் செய்தது.

புலிகளைப் பிடிக்க வனத்துறைக்கு மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தும், சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால், கிராம மக்கள் போராட்டமாக, புலியைப் பிடிக்க கொண்டு வந்த கூண்டிலேயே வனத்துறை ஊழியர்களை பூட்டினர். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிர்வாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“>

சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், குண்டலுபேட்டை ஏசிஎஃப் சுரேஷ் மற்றும் பந்திப்பூர் ஏசிஎஃப் நவீன் குமார் உடனடியாக கிராமத்திற்கு வந்து, புலியை விரைவில் பிடிப்பதாகவும், வளர்ப்பு யானைகளின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து, விவசாயிகள் வனத்துறை ஊழியர்களை விடுவித்தனர். ஆனால், புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என  சங்கத் தலைவர்  எச்சரித்துள்ளார்.

புலி தாக்குதலால் விவசாயிகளின் கால்நடைகள் தொடர்ந்து அழிந்து வருவதால், அவர்கள் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகி விட்டதாகவும், உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை மோசமடையும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.