
உத்தரபிரதேசம், சஹரன்பூர் மாவட்டம் கங்கோ பகுதியில் காவல்துறையினரின் மனிதநேயம் நிறைந்த செயலுக்காக அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அதாவது. வேலை செய்த இடத்தில் சம்பளத்தை பெற முடியாத ஒரு ஏழை விதவைப் பெண், தனது மகளுக்குத் திருமணம் செய்ய முடியாமல் மனவேதனையில் இருந்தார். இந்நிலையில், அந்தப் பெண் தனது பிரச்சினையை கங்கோ காவல் நிலையத்தில் தெரிவித்தார். அவரது துயரக் கதையை கேட்ட காவல்துறையினர், உடனடியாக நேரில் சென்று உதவிக்கரம் நீட்டினர்.
அந்தப் பெண்ணின் நிலையை புரிந்துகொண்ட போலீசார், அவருக்கு காவல் நிலையத்தில் தற்காலிக வேலைவாய்ப்பை ஏற்படுத்தினார்கள். அதுமட்டுமின்றி, அவரது மகளின் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தாங்களே மேற்கொண்டு, பொறுப்போடு திருமணத்தை நடத்தினார்கள். காவல்துறையினர் தங்கள் சொந்த செலவிலேயே திருமணத்தை அழகாக ஏற்பாடு செய்ததோடு, அவரவர் தங்களின் தனிப்பட்ட வசதிக்கு ஏற்ப பரிசுகளையும் வழங்கினர்.
இது போன்ற செயல், அந்தத் தாயின் உறவினர்களால் கூட செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. திருமண நிகழ்வில் காவல்துறையினர் அனைவரும் பங்கேற்று, தங்கள் பாசத்தையும், ஆசீர்வாதத்தையும் அந்தக் குடும்பத்திற்கு வழங்கினர். இந்த செயல் சமூகத்தில் காவல்துறையின் மீது மக்களிடையே பெரும் மரியாதையை உருவாக்கியுள்ளது. காவல்துறையினர் காட்டிய கருணை மற்றும் பொறுப்புணர்வு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ்வாறு, காவல்துறை ஒவ்வொரு நாளும் மக்களுக்காக செயற்படுவதை இந்த நிகழ்வு மேலும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. இது போன்ற மனிதநேய செயல்கள் காவல்துறையின் சிறப்பான முகமாக சமூகத்தில் நிலைத்து நிற்கும் வகையில் செயல்படுகிறது. மேலும் கங்கோ காவல்துறையினருக்கு சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.