சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் போலியாவணங்கள் மூலம் தங்களின் உண்மையான சுய விபரங்கள் மற்றும் குடியுரிமையை மறைத்து சட்டவிரோதமான முறையில் பாஸ்போர்ட் பற்றி சிலர் வெளிநாடு செல்ல முயற்சி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வங்காளதேசத்தை சேர்ந்த முகமது, இலங்கையைச் சேர்ந்த சரோஜினி தேவி, நேபாளத்தைச் சேர்ந்த தன்ராஜ், ஒடிசாவை சேர்ந்த பினாகாஸ், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஆந்திராவைச் சேர்ந்த செல்லம்மா, சிவகங்கை சேர்ந்த பரகத்துல்லா ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.

அந்த விசாரணையில் அவர்கள் தங்களது சுய விவரங்கள் மற்றும் குடியுரிமையை மறைத்தனர். பின்னர் இந்திய அடையாள ஆவணங்களான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு ஆகியவற்றை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. அவர்கள் மத்திய அரசை ஏமாற்றி சட்டவிரோதமாக பாஸ்போர்ட் பெற்று அதன் மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றதும் உறுதியானது. அவர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முறையான அனுமதி பெறாமல் இயங்கி வரும் டிராவல்ஸ் நிறுவனங்களை நம்பி தவறான வழிகாட்டுதலின் அடிப்படையில் மக்கள் போலியான ஆவணங்களை பெற வேண்டாம். அதன் அடிப்படையில் மோசடியாக பாஸ்போர்ட்டுகளை பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சி செய்ய வேண்டாம். அப்படி செல்பவர்கள் அவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.