
இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் தனது மனைவி சோனத்துடன் தேனிலவுக்குச் சென்று கொலை செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேகாலயா காவல்துறையினர் சோனம் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். ராஜாவின் கொலையில் அவரது மனைவி சோனம் நேரடியாக தொடர்புடையவராக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சோனம் கூலி ஆட்களை ஏவி இந்த செயலை திட்டமிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜூன் 2ஆம் தேதி வைசாவடோங் நீர்வீழ்ச்சி அருகே ராஜா ரகுவன்ஷியின் உடல் ரத்த வெள்ளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார், சோனம் ரகுவன்ஷியை தேடிய நிலையில் ஜூன் 8–9 தேதிகளில் உ.பி.-யின் காஜிபூரில் உள்ள ஒரு தாபாவில் கைது செய்தனர். சோனம் கடந்த 17 நாட்களாக தலைமறைவாக இருந்துள்ளார். அவர் தனது சகோதரனை தொடர்புகொண்டதும், போலீசார் அவர் இருப்பிடம் கண்டுபிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில், சோனத்தின் தந்தை தேவி சிங் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “என் மகள் நிரபராதி. போலீசார் பொய்கள் கூறி என் மகள்மீது வழக்குப் பதிவு செய்து சிக்க வைக்கிறார்கள். என் மகள் ஏன் தன் கணவரைக் கொல்ல வேண்டும்? அவர் காஜிபூரிலிருந்து சகோதரனுடன் பேசிக்கொண்டிருந்தபோது போலீசார் அவரை பிடித்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும், “எங்கள் குழந்தைகளை யாரையாவது கொல்லும் வகையில் நான் வளர்க்கவில்லை” எனக் கூறி தனது மகளை உறுதியாக பாதுகாத்தார். தற்போது, கைது செய்யப்பட்ட நால்வரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கொலையின் பின்னணியும் சதித் திட்டமும் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.