
இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா நிறுவன பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 242 பேரில் 241 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விமானம் விழுந்த பகுதியில் பிஜே மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதி இருந்துள்ள நிலையில் அங்கு இருந்த பயிற்சி மருத்துவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது. அந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சென்னை மாணவர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். அவரின் பெயர் அருண் பிரசாத்.
விபத்து ஏற்பட்ட மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் தங்கி எம்பிபிஎஸ் படித்து வந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மாணவர் அருண் பிரசாத் கூறியதாவது, அந்த விபத்தின் போது நான் எனது நண்பர்களுடன் விடுதி கட்டிடத்தில் 5ஆவது தளத்தில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
அப்போது திடீரென மிகப்பெரிய சத்தத்துடன் கட்டிடத்தின் மீது ஏதோ விழுந்தது. அடுத்த சில வினாடிகளிலேயே நாங்கள் இருந்த தளம் முழுவதும் புகைமூட்டமானது. என்ன நடக்கிறது? என புரியாமல் முதல் தளத்திற்கு ஓடி வந்தேன் பின்னர் அங்கிருந்து கீழே குதித்தேன்.
கீழே வந்த பிறகுதான் விமானம் விபத்துக்குள்ளாகி மருத்துவ விடுதி கட்டிடத்தின் மீது விழுந்துள்ளது தெரிந்தது. விபத்து ஏற்பட்ட 15 நிமிடங்களில் மீட்பு குழுவினர் உடனடியாக வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் என கூறினார்.