டெல்லி நகரில் DTC பேருந்தின் முன்பாக ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்கில் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த ஒரு இளைஞரின் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவலாக வைரலானது.

ஹெல்மெட் அணியாமல், பைக் ஒட்டி பேருந்து ஓட்டுநரின் வழியைக் குறுக்கி, ஜிக்-ஜாக் இயக்கத்தில் பைக்கை ஓட்டிய அந்த இளைஞர், தனது செயலை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். இது மக்கள் மத்தியில் கடும் எதிர்வினையை ஏற்படுத்தியது.

வீடியோவை பார்த்த டெல்லி போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். பேருந்து நின்ற இடத்திலிருந்து தகவல் சேகரித்து, அந்த பைக்கின் அடையாளத்தை கண்டுபிடித்தனர். பைக் 13 ஆண்டுகளுக்கு முன்னர் விற்கப்பட்டது.

ஆனால் உரிமையாளரின் பெயர் புதுப்பிக்கப்படவில்லை. பழைய உரிமையாளரின் உதவியுடன் தற்போது உள்ள உரிமையாளரை போலீசார் கண்டுபிடித்து பைக்கை கைப்பற்றினர். பைக் 15 ஆண்டுகளுக்கு மேல் பழையதாக இருந்ததால், ஸ்கிராப்பிங் விதிகளின் கீழ் அது உடனடியாக ஸ்கிராப் செய்யப்பட்டது.

பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, இளைஞரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் இந்த வீடியோ குறித்து பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“இவனை நன்றாக அடிக்கணும்” என்றும், “இவனை மாதிரியானவர்களால்தான் சாலையில் அப்பாவிகள் உயிரிழக்கிறார்கள்” என்றும் நெட்டிசன்கள் கோபத்துடன் பதிவிட்டுள்ளனர். இது போன்ற அபாயகரமான செயலைக் கட்டுப்படுத்த, போலீசார் எதிர்காலத்தில் மேலும் திடமான நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.