ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் மோசமான  தோல்வி அடைந்த பாகிஸ்தான், தங்களது அடுத்த சுற்றுப்பயணமாக நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை தொடங்கியது. முதல் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் மார்ச் 16ஆம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச தீர்மானித்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ் மற்றும் இர்பான் கான் தொடக்கத்திலேயே விரைவாக வெளியேறி, 1-3 என்ற  மோசமான நிலையில் ஆடினர். கேப்டன் ஆகா சல்மானும் பெரிய ஸ்கோர் செய்ய முடியாமல் 18 ரன்னில் அவுட்டாக, பாகிஸ்தான் அணியின் நிலை மேலும் மோசமடைந்தது.

பாகிஸ்தான் அணியின் மோசமான டி20 சாதனை:

நியூசிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் ஒன்று ஒன்றாக சரிந்தனர். சடாப் கான் 3, அப்துல் சமத் 7 ரன்னில் அவுட்டாகி அணியை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தினர். ஒரே ஒரு வீரரான குஸ்தில் சா மட்டுமே அணியை தனி ஆளாய்  இழுத்து செல்ல முயன்றாலும், அவர் எடுத்த 32 (30) ரன்களும் பயனளிக்கவில்லை. 18.4 ஓவரில் பாகிஸ்தான் வெறும் 91 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, நியூசிலாந்துக்கு எதிராக தனது மோசமான டி20 ஸ்கோரை பதிவு செய்தது. இது மட்டும் இல்லாமல், பாகிஸ்தான் அணிக்கு முதல் முறையாக 100 ரன்களை அடைய முடியாமல் தோல்வியை சந்திக்கும் மிகப்பெரிய அவமானத்தையும் இந்த போட்டி ஏற்படுத்தியது.

நியூசிலாந்தின் அதிரடி வெற்றி:

நியூசிலாந்து பந்து வீச்சில் கைல் ஜெமிசன் 3 விக்கெட், ஜேக்கப் டுஃபி 4 விக்கெட், இஸ் சோதி 2 விக்கெட் வீழ்த்தி பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டிம் சைபஃர்ட் 44 (29), ஃபின் ஆலன் 29* (17), டிம் ராபின்சன் 18* (15) என அதிரடியாக ஆடியதால், 10.1 ஓவரிலேயே 92-1 ரன்களை எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், நியூசிலாந்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றியில்லாமல் வெளியேறிய பாகிஸ்தான், இத்தொடரில் புதிய அணியுடன் களமிறங்கியும் மீண்டும் பெரும் தோல்வியை சந்தித்து, ரசிகர்களின் ஏமாற்றத்தை அதிகரித்துள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது.. சிறந்த பந்து வீச்சாளர்கள் , அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.. ஏனோ அவர்கள் தற்போது பிரகாசிக்க முடியவில்லை.. இருப்பினும் அடுத்த போட்டியில் அவர்கள் நிமிர்ந்து விடா முயற்சியுடன் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.