
உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டம், குவார்சி காவல் நிலையச் சீமையில் உள்ள சஞ்சய் காந்தி காலனியைச் சேர்ந்த பிரவீன் மற்றும் அவரது மனைவி புஷ்பா இடையே சோப்பை மையமாகக் கொண்டு வெடித்த சண்டை, தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது.
தினசரி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக மருமகள் மீது குற்றம் சாட்டியுள்ள புஷ்பாவின் மாமியார், அந்த நாளும் வழக்கம்போல சண்டை ஏற்பட்டதாக கூறினார். பிரவீன் குளிப்பதற்காக சென்றபோது தனது மனைவியின் சோப்பை பயன்படுத்தியதிலிருந்து தகராறு ஆரம்பமானது. தன்னுடைய சோப்பை கணவர் பயன்படுத்தியதால் கோபத்தில், புஷ்பா செங்கல்லை எடுத்து தன்னுடைய கணவரை அடித்தார்.
இதன் தொடர்ச்சியாக இருவருக்கும் இடையே தீவிர சண்டை ஏற்பட்டதாகவும், பிரவீன் தன்னை அடித்து உதைத்ததாகவும் அவரது மாமியார் கூறியுள்ளார். தகவல் பெற்ற புஷ்பாவின் பெற்றோர், போலீசாருடன் அவருடைய வீட்டிற்கு வந்தனர்.
இந்த சம்பவத்தில் போலீசார் வீட்டிற்கு வந்து பிரவீனை கைது செய்ய முற்பட்டுள்ளனர். ஆனால் பிரவீன், “நான் ஒளிந்தோ ஓடப்போவதில்லை, உங்களுடன் வருகிறேன்,” என கூறியபோதும், போலீஸ்காரர் ஒருவர் பிரவீனை அறைந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து போலீசாரை திட்டியதாகவும் பின்னர் காவல் நிலையத்தில் அவரை மேலும் தாக்கியதாகவும் அவரது தாய் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து, சி.ஓ. சர்வம் சிங் கூறியதாவது: “மனைவி தான் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். பிரவீன் திருமணத்திற்கு முன் பல விஷயங்களை மறைத்ததாகவும், தற்போது அடித்து துன்புறுத்துவதாகவும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். அவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகின்றன,” என்றார்.
இந்த வழக்கில் கணவனும் மனைவியும் இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். போலீசாரது தாக்குதல் குறித்த புகாரும் விசாரணையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.