டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு பயணி தரையில் படுத்துக்கொண்டு தூங்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுமக்கள் மற்றும் பயணிகள் இந்தச் செயலால் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்த புகைப்படம் டெல்லி மெட்ரோவின் ப்ளூ லைன் வழித்தடத்தில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த நபர், தனது செருப்புகளை கழற்றி, பையை தலையாக வைத்து மெட்ரோ ரயில் பெட்டிக்குள் படுத்து இருந்தார்.

இந்த செயலால் மற்ற பயணிகள் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. சமூகத்தில் பொதுநலத்தையே முதன்மையாகக் கருத வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதினை நினைவுபடுத்தும் வகையில், பலரும் இந்த பயணியின் நடத்தை பற்றி விமர்சனம் தெரிவித்துள்ளனர்.

இந்த புகைப்படம் Xபக்கத்தில் @KamalHak என்ற பயனர் பகிர்ந்திருந்தார். இதற்கு  டெல்லி மெட்ரோ அதிகாரப்பூர்வமாக பதிலளித்துள்ளது. @OfficialDMRC பதிலளிக்கையில், “ஏதேனும் சிரமத்திற்கு மன்னிக்கவும். மேலும் விசாரணைக்காக ரயில் எண் மற்றும் பெட்டி எண்ணை வழங்கவும்” என தெரிவித்துள்ளது.

இதே போன்ற புகார்கள் பல முறை முன்வைக்கப்பட்டாலும், மெட்ரோ நிர்வாகம் இவ்வாறான பொதுவான பதில்களையே வழங்கி வருவதால், பயணிகள் நடவடிக்கைக்கான நம்பிக்கையை இழந்துள்ளனர்.

இது போன்ற தரையில் அமர்தல் மற்றும் படுத்தல் போன்ற செயல்கள் பயண அனுபவத்திற்கு இடையூறாக இருப்பதால், பயணிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.