மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தின் மைங்கான் பகுதியில் உள்ள ஏக்லவ்யா ஆதர்ஷ் குடியிருப்புப் பள்ளியில், பெண் முதல்வருக்கும் நூலகருமான பெண்ணுக்கும் இடையே நடந்த கடுமையான சண்டை, பள்ளி வளாகத்தையே பரபரப்பாக மாற்றியுள்ளது. இருவரும் ஒருவருக்கொருவர் தலைமுடியை இழுத்தும், அறைந்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் கல்வி நிலையங்களில் நடக்க வேண்டிய ஒரு நிகழ்வாக இல்லையென பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின்போது, முதல்வரின் மகனும் மற்றொரு ஆசிரியரும் தாக்குதலை வீடியோவில் பதிவு செய்திருந்தனர். முதல்வர் பிரவீன் தஹியா மற்றும் நூலகர் மது ராணி ஆகியோரிடையே, மாணவர்களின் புத்தகங்களை எடுத்துச் செல்வது தொடர்பான வாக்குவாதம் கடுமையான சண்டையாக மாறியது. முதல்வர், நூலகரின் மொபைலை பிடுங்கி எறிந்ததும், நூலகரும் பதிலடி கொடுத்தார்.

 

இருவரும் தலைமுடியைப் பிடித்து இழுத்து துப்பட்டாவால் ஒருவரை ஒருவர் நெறித்து கடுமையாக சண்டை போட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் விசாரணை நடத்தியதில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.