ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் கல்லூரி படிக்கும் தனது மகள் தேவிஸ்ரீ உடன் நேற்று சூளூர்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வரும் ரயிலில் வந்துள்ளார். ரயில் மீஞ்சூரில் நின்றவுடன் தந்தை மகள் இருவரும் சூட்கேசுகளுடன் மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். இரவு நேரம் என்பதால் சூட்கேஸை அங்கேயே வைத்துவிட்டு நைசாக சென்றனர். அவர்கள் நடத்தையில் சந்தேகம் அடைந்த ரயில்வே ஊழியர் ஒருவர் அவர்களை பின் தொடர்ந்து சென்று பிடித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

ஒரு சூட்கேஸில் தேவி ஸ்ரீ கொண்டு வந்த பொருட்களும், மற்றொரு சூட்கேஸில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலமும் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் இருவரும் நெல்லூரில் இருந்து சூலூர்பேட்டை வந்து அங்கிருந்து சென்னை நோக்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். அந்த நபர் கூறியதாவது, எனது மகள் கல்லூரியில் படிக்கிறார். சம்பந்தப்பட்ட பெண் எனது மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயற்சி செய்தார். அதற்கு எனது மகள் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதுபற்றி கூறியவுடன் நான் கோபத்தில் அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கினேன். இதனால் அவர் இறந்துவிட்டார். என்ன செய்வது என்று அறியாமல் ரகசியமாக சடலத்தை அப்புறப்படுத்தி எங்கேயாவது போட்டு விடலாம் என நினைத்தேன். பின்னர் பெண்ணின் சடலத்தை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்தோம் என அந்த நபர் கூறியுள்ளார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பெண்ணின் விபரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.