
வரதட்சணை கொடுமை செய்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதனால் மனம் உடைந்த ஓர் இளைஞர், அந்த குற்றச்சாட்டுக்கு எதிராக தனித்துவமான முறையில் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.
ராஜஸ்தானின் பாரனில் உள்ள அன்டா பகுதியில், தனது மாமியார் வீட்டிற்கு அருகில், “498A டீ கஃபே” எனும் பெயரில் ஒரு தேநீர் கடையைத் திறந்துள்ளார். அந்த கடையின் வெளியே, “நீதி கிடைக்கும் வரை டீ கொதிக்கும்” என்ற விளம்பரப் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, இவர் கைவிலங்கு (handcuff) அணிந்து தேநீர் தயாரிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த இளைஞர் மத்தியப் பிரதேசம், நீமுச்சைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தகாத்.
இவரது மனைவியின் குடும்பத்தினர், அவரது மாமியார், இவர்மீது 498A பிரிவின் கீழ் வரதட்சணை கொடுமை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை அவர் மறுத்து, அதற்கெதிராக சமூக விழிப்புணர்வு செய்யும் வகையில் இந்த தேநீர் கடையைத் தொடங்கியுள்ளார்.
மேலும், “டீ குடிச்சுட்டுப் பேசலாம்… 125 ரூபாய்க்கு எவ்வளவு நீதி கிடைக்கும் எனக் கணக்கிடலாம்” எனும் உரையையும் கடையில் இடம் பெற்றுள்ளார். கிருஷ்ண குமார் தகாத், கடந்த காலத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டவர்.
2019-ஆம் ஆண்டு இதைத் தொடங்கியதிலிருந்து பல வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார். ஏப்ரல் 2021ல், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் அவர்களை பாராட்டியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது, பொய்யான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்லும் பணியில் இந்த தேநீர் கடை வழியாக அவர் ஈடுபட்டு வருகிறார். இது சமூகத்தில் புதியவிதமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.