நீலகிரி மாவட்டம் ஊட்டி ஓடைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீசன்(41). இவர் கால்நடைகள் வளர்ப்பு மற்றும் விவசாயம் செய்து வருகிறார் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெகதீசனின் மூத்த மகன் சுனித்(10).

இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று சுனித்தின் அம்மா குளிப்பதற்காக வாளியில் தண்ணீர் வைத்து வாட்டர் ஹீட்டர் போட்டுவிட்டு சென்றுள்ளார். அப்போது அங்கு சென்ற சுனித் தண்ணீர் சூடாகி விட்டதா என வாளியில் கைவைத்து பார்த்தபோது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனால் சுனித் தூக்கி வீசப்பட்டு பேச்சு மூச்சின்று கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுனித்தின் பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சுனித்தை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று சுனித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சுனித் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.