மத்தியப்பிரதேச மாநிலம் நர்மதாபுரம் பகுதியில், மதுபானக் கடை அருகே நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களைக் கும்பல் ஒன்று கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மதுபானக் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த அந்த இளைஞர்களிடம், அங்கு வந்த சிலர் மது அருந்துமாறு கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அதற்கு அந்த இளைஞர்கள் மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், எவ்வித இரக்கமும் இன்றி அவர்கள் இருவரின் முடியைப் பிடித்து இழுத்து, பிளாஸ்டிக் மற்றும் இரும்புப் பைப் போன்ற ஆயுதங்களால் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் வலியால் கதறித் துடித்த போதிலும், அந்தக் கும்பல் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து தாகூரமாக நடந்துகொண்டுள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் முழுவதையும் அங்கிருந்த யாரோ ஒருவர் தனது கைப்பேசியில் படம் பிடித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட, அது தற்போது தீயாகப் பரவி வருகிறது.

விலங்குகளை விடக் கேவலமாக இளைஞர்களைத் தாக்கும் இந்தக் காட்சியைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்து, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் பொது இடத்தில் நடந்த இந்த வன்முறை குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். வைரலாகும் வீடியோ காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளங்காண வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மது அருந்த மறுத்த ஒரே காரணத்திற்காக இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட இந்த மனிதநேயமற்ற தாக்குதல், சமூகத்தில் பெருகிவரும் மதுப் பழக்கத்தின் கொடூர முகத்தையும், பொதுமக்களின் பாதுகாப்பில் நிலவும் அச்சத்தையும் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

“>