ஐபிஎல் தொடரில் ஜொலித்த பீகாரைச் சேர்ந்த 15 வயது இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி, தற்போது இந்திய சீனியர் அணியில் இடம்பிடித்து சர்வதேச கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு இளம் வயதில் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளதன் மூலம், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மிக இளம் வயது சாதனையையே வைபவ் முறியடிக்கவுள்ளார்.

ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையும் தற்போது இந்த ‘ரைசிங் ஸ்டார்’ மீதுதான் உள்ளது. இந்நிலையில், இந்த திடீர் புகழால் இளம் வீரரின் கவனம் சிதறிவிடக் கூடாது என்பதற்காக, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் எஸ்.ஸ்ரீசாந்த் வைபவ்க்கு மிக முக்கியமான மற்றும் நெகிழ்ச்சியான அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.

வைபவ்வின் இந்த அசுர வளர்ச்சிக்கு பின்னால் அவரது அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் அவரது குடும்பத்தின் மிகப்பெரிய தியாகம் ஒளிந்திருப்பதாக ஸ்ரீசாந்த் பாராட்டியுள்ளார். கொரோனா லாக்டவுன் காலத்திலும் வீட்டின் மொட்டை மாடியில் வைபவ் தீவிரப் பயிற்சி மேற்கொண்டதையும், தினமும் 750 முதல் 1000 பந்துகளை எதிர்கொள்வதற்காக மட்டும் தினமும் 4 மணி நேரம் பயணம் செய்த அவரது விடாமுயற்சியையும் ஸ்ரீசாந்த் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “வைபவ், தற்போது உனக்குக் கிடைத்துள்ள இந்த அசுர புகழைக் கண்டு உன்னைச் சுற்றி பல கார்ப்பரேட் மேனேஜர்கள் (வணிக மேலாளர்கள்) மொய்க்கத் தொடங்குவார்கள். தயவுசெய்து அவர்களை எல்லாம் தள்ளி வை. உன்னுடைய விஷயங்களை உன் தந்தையும், குடும்பத்தினரும் பார்த்துக் கொள்வார்கள். நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்து என்று ஸ்ரீசாந்த் பாசத்துடன் எச்சரித்துள்ளார்.