
திருநெல்வேலி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், பேருந்து ஓட்டுநருடன் தகராறு மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களில் ஒருவர் அரைநிர்வாண கோலத்தில் பேருந்தை மறித்து நின்றது, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் அதிவேகமாக வைரலாக பரவி வருகிறது. செய்துங்கநல்லூர் அருகே உழக்குடியில் இருந்து நெல்லை சந்திப்புக்கு சென்ற அரசுப் பேருந்து, பாளை மார்க்கெட் பகுதியை அடைந்தபோது, ரவீன்ராஜ் (24) மற்றும் சுந்தர்ராஜ் (24) ஆகிய இரு இளைஞர்கள் தங்களுக்குள் முதலில் தகராறில் ஈடுபட்டனர்.
பின்னர், திடீரென பேருந்தை வழிமறித்து, ஓட்டுநர் சசிகுமார் தட்டிக்கேட்டபோது, இருவரும் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உச்சகட்டமாக, ரவீன்ராஜ், தனது ஆடைகளை கழட்டி, அரைநிர்வாணமாக பேருந்தை முன்னேற விடாமல் தடுத்த சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
இது தொடர்பாக பேருந்து ஓட்டுநர் சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து, இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இரு இளைஞர்களின் இந்த அநாகரிக மற்றும் பொது அமைதிக்கு விரோதமான செயல்கள், பொதுமக்களிடையே கடும் கண்டனத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.