ஓஹையோ மாநிலம் டோலிடோவைச் சேர்ந்த டெரிக் கண்ட் (57 வயது) என்ற நபர், கடந்த ஜூலை 23ஆம் தேதி தனது வீட்டில் ஜம்ப் ரோப்பிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென ஸ்ட்ரோக் ஏற்பட்டு தவித்தார். அவர் தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோன்று சம்பவ நாளிலும், அதிக நேரம்  ஜம்ப் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் பயிற்சி செய்தார். ஆனால்,  15 விநாடிகள் கழித்து, அவரது இடது கை மற்றும் கால் உணர்வு இழந்ததோடு நிலை தாறுமாறாகியதால் கீழே விழுந்தார்.

 

அப்போது அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச், “நீங்கள் சிரமத்தில் இருக்கிறீர்கள் போலிருக்கிறது. உதவி வேண்டுமா?” என எச்சரிக்கை செய்தது. ஆரம்பத்தில் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத டெரிக், உடல்நிலை மோசமடையத் தொடங்கியதும் உதவி தேவை என வாட்சில் உறுதிப்படுத்தினார். உடனடியாக அவசர எண்களுக்கு அழைப்பும், அவரது நெருங்கியவர்களுக்கும் தகவல் சென்றது. பராமரிப்பு குழு விரைந்து வந்ததால் அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சையால் 24 மணி நேரத்திலேயே அவர் 90 சதவீதம் மீண்டுள்ளார். இது பற்றி டெரிக் கூறுகையில் “என் வாழ்க்கைமுறை சீராக இருந்ததால் மட்டும் அல்ல, இந்த ஸ்மார்ட் வாட்சும் என் உயிரைக் காப்பாற்றியது,” என அவர் கூறினார். மருத்துவ நிபுணர்கள், இது போன்ற ஸ்ட்ரோக் சம்பவங்களில் உடனடி அறிவிப்பு மற்றும் சிகிச்சை உடனே குணமடைய உதவும் என்று கூறியுள்ளனர்.