
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பிஜே மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்து தீப்பிடித்த விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 242 பயணிகளில் ஒருவரே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். விபத்தில் உடல்கள் தீவிரமாக கருகியுள்ளதால், பலியானவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை நடைமுறையில் உள்ளது. தீவிர மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த பரிதாபகரமான விபத்துத் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதில், விமானம் விழுந்த பிஜே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் துண்டாகி கிடந்த மனிதத் தலையை சில இளைஞர்கள் செல்போனில் புகைப்படமாக எடுத்து, சிலர் அதனருகே நின்று செல்பி எடுத்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வெளியானதும் பலரும் அதிர்ச்சி மற்றும் வன்மையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இத்தகைய துயரமான நிகழ்விலும் மனித மரியாதை இழந்த செயல்களில் ஈடுபட்ட இளைஞர்களின் செயல், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதிகாரிகளும், மீட்பு மற்றும் விசாரணை பணிகளில் உதவாமல், இத்தகைய செயல்களை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.