உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் பராமரிப்பாளராக பணியாற்றிய பூனம் கங்வார் என்ற பெண், அங்கு வசிக்கும் சிறு குழந்தைகளை தடியால் அடித்து கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மூன்று வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. வீடியோவில், பூனம் கங்வார் குழந்தைகளைக் குச்சியால் அடிப்பது, காதுகளை இழுப்பது போன்ற கொடூர காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன.

சௌக் கோட்வாலி பகுதியில் உள்ள இந்த அரசு குழந்தைகள் காப்பகம், பரேலி சாலையில் அமைந்துள்ளது. இதில் 13-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் பராமரிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பூனம் கங்வார்,  குழந்தைகளை அடித்ததை பாஜகவின் மாவட்ட உறுப்பினர் முகேஷ் தீட்சித் கண்டித்து, 2024 டிசம்பர் 31 அன்று அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார். அதன் பேரில் மாவட்ட நன்னடத்தை அதிகாரி கௌரவ் மிஸ்ரா விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்டவரை இடைநீக்கம் செய்தார்.

 

 

தற்போது இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி அபராஜிதா மேலும் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். “இது பழைய சம்பவமாக இருந்தாலும், தற்போது கிடைத்த வீடியோக்களில் குழந்தைகள் மீது காட்டப்பட்ட கொடுமை மிகுந்த சோகத்திற்குரியது. மேலும் இது போன்ற செயலில் ஈடுபடுபடுபவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என அதிகாரிகள் தெரிவித்தனர்.