தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சாய்பல்லவி. இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறார். தற்போது சினிமா அனுபவங்கள் பற்றி சாய்பல்லவி பேட்டி அளித்ததாவது, ”நான் டாக்டருக்கு படித்திருந்தாலும் நடிக்கும் ஆசை இருந்தது. அழகு என்பது தோற்றத்தில் இல்லை, குணத்தில்தான் உள்ளது என்பதை வெளிப்படுத்த பிரேமம் படத்தில் எளிமையாக நடித்திருந்தேன். அப்படம் பெரிய அளவுக்கு வெற்றி பெறும் என அப்போது நினைக்கவில்லை.

நான் நடித்த திரைப்படங்களும், கதாபாத்திரங்களும் ரசிகர்களுக்கு பிடிக்கவேண்டும் என நினைக்கிறேன். அது போன்ற கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். ஆகவே நல்ல கதை அமைந்தால் எந்த மொழி திரைப்படங்களில் வேண்டுமானாலும் நடிப்பேன். என்னை பார்ப்பவர்கள் எங்களது வீட்டு பெண் மாதிரி இருக்கிறாய் என்று கூறுகின்றனர். அதனை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.