ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், சென்னை வீரர் சர்பராஸ் கானின் கொண்டாட்டம் குறித்த தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

நடப்புத் தொடரில் பெங்களூரு அணி தனது அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. சென்னைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 250 ரன்களைக் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியில், சர்பராஸ் கான் மற்றும் ஜேமி ஓவர்டன் ஜோடி அதிரடியாக விளையாடி வெற்றிக்காகப் போராடியது. இருப்பினும், சென்னை அணி தோல்வியைத் தழுவியது.

இந்த ஆட்டத்தில் அரைசதம் கடந்த சர்பராஸ் கான், அதனை வினோதமான முறையில் கொண்டாடினார். இதனைச் சமூக வலைதளங்களில் சில நெட்டிசன்கள், ‘ஈரான் நாட்டிற்கு ஆதரவான அரசியல் அல்லது மத ரீதியிலான செயல்’ எனத் தவறாகச் சித்தரித்து விமர்சனம் செய்யத் தொடங்கினர்.

சர்பராஸ் கானின் அந்தச் செயல் முழுக்க முழுக்க விளையாட்டின் மீதான உற்சாகத்தை வெளிப்படுத்துவதே தவிர, அதில் எந்தவிதமான அரசியல் உள்நோக்கமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மைதானத்தில் இருந்த விராட் கோலி கூட, சர்பராஸின் ஆட்டத்தைப் பாராட்டி கட்டைவிரலை உயர்த்தி வாழ்த்து தெரிவித்தார். சக வீரர்கள் இதனை ஒரு சிறந்த விளையாட்டுத் திறனாகவே பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2025 ஐபிஎல் சீசனில் எந்த அணியாலும் ஏலம் எடுக்கப்படாத சர்பராஸ் கான், இந்த ஆண்டு மினி ஏலத்தின் முதல் சுற்றிலும் யாராலும் வாங்கப்படவில்லை. இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ரூ. 75 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி வரும் சர்பராஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 12 பந்துகளில் 32 ரன்களும், பெங்களூரு அணிக்கு எதிராக அரைசதமும் அடித்துத் தனது திறமையை நிரூபித்து வருகிறார். மேலும் தேவையற்ற விமர்சனங்களைத் தாண்டி, அவரது பேட்டிங் திறமை தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.