மத்தியப் பிரதேச மாநிலம் சந்தப்பூர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியை மம்தா பதக் மீது, தனது கணவர் நீரஜ் பதக்கை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 2021 ஏப்ரல் 29ஆம் தேதி, நீரஜ் பதக் (ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்) தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பிரேத பரிசோதனையில், தூக்கமாத்திரைகள் கொடுக்கப்பட்டதுடன், மின்சாரம் பாய்ச்சப்பட்டதாலும் நீரஜ் உயிரிழந்தது உறுதியாகியது.

இதையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில், அவரது மனைவி மம்தா பதக்கை போலீசார் கைது செய்தனர். கணவன் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த மம்தா பதக், திட்டமிட்டு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில், ஜபல்பூர் மாவட்ட நீதிமன்றம் மம்தா பதக்கை குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மம்தா பதக், மத்தியப் பிரதேச ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மே 28ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர்கள் இல்லாமல் தானே நேரில் ஆஜராகி, தனது அறிவியல் அறிவைப் பயன்படுத்தி வாதிட்டார். “மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட காயங்களையும் தீக்காயங்களையும் வெறும் கண்ணால் வேறுபடுத்த முடியாது. இதற்கான துல்லியமையான ஆய்வுகள் பிரேத பரிசோதனை அறையில் மேற்கொள்ளப்படவில்லை, எனவே என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை” என அவர் வாதிட்டார். இந்த வாதம் நீதிபதிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

“>

 

இந்நிலையில்,  மம்தா பதக்கின் மேல்முறையீட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த ஐகோர்ட், “மம்தா பதக் தனது கணவரை திட்டமிட்டு தூக்கமாத்திரை கொடுத்து, பின்னர் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது ஆதாரங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இவர் குற்றவாளி என்பதை உறுதி செய்கிறோம்” எனத் தெரிவித்தது.

இதனையடுத்து, மாவட்ட நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ஐகோர்ட் உறுதி செய்தது. வேதியியல் பேராசிரியை என்ற உயரிய பதவியில் இருந்த மம்தா பதக் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.