
கடலூரைச் சேர்ந்த பாலமுருகன் – பச்சையம்மாள் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் இரண்டு ஆண் குழந்தைகள், மற்றும் ஒரு பெண் குழந்தை. பாலமுருகனுக்கு சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், பச்சையம்மாள் தனது உறவினர் ஜீவாவுடன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திண்டிவனம் சென்றிருந்தார். அங்கு, ஜீவாவின் வீட்டில் தங்கியிருந்து மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை, பச்சையம்மாள், பாலமுருகனின் உறவினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “நான் கடலூருக்கு வந்துகொண்டிருக்கிறேன்… என் பெண் குழந்தை இறந்துவிட்டாள்” என கூறியுள்ளார். இதைக் கேட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, கடலூர் பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் காத்திருந்தனர். ஆனால், பச்சையம்மாள் வரவில்லை.
அதன்பின் உறவினர்கள் பல இடங்களில் தேடியபோது, கடலூரில் உள்ள உழவர் சந்தை அருகே, 4 வயது இறந்த குழந்தையை தோளில் சுமந்தபடி பச்சையம்மாளும் மற்ற இரு குழந்தைகளும் நடந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இறந்த குழந்தையின் உடலில் பல காயங்கள் இருந்ததையும், பொதுமக்கள் கவனித்துள்ளனர்.
உடனே தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
தற்போது, பச்சையம்மாள் மற்றும் மற்ற இரு குழந்தைகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜீவா என்பவர் குழந்தையை அடித்து கொலை செய்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுவதுடன், பாலமுருகனின் உறவினர்களும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
பச்சையம்மாளின் பதில்கள் மற்றும் சடலத்தில் உள்ள காயங்களின் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையான பின்னணி மரண விசாரணை முடிவில் வெளிவரும் என கூறப்படுகிறது.