ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா, குலு பகுதியில் நேற்று காலை மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அப்பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கிருந்த வீடுகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

அந்த கனமழையால் கன்யாராவில் உள்ள பகுதிகளில் ஓடைகள் அருகே தற்காலிக குடில் அமைத்து அரசு நீர்மின் திட்ட பணிகளில் வேலை பார்த்து வந்த தொழிலாளிகள் தங்கியிருந்தனர். திடீரென அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் இருந்த 20 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

தற்போது மீட்பு குழுவினர் அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் 2 தொழிலாளர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீதமுள்ளவர்களின் நிலை குறித்து எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மேலும் மேக வெடிப்பினால் அப்பகுதிகளில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சில இடங்களுக்கு மீட்பு குழுவினரால் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த தென்மேற்கு பருவமழை காற்றின் சீற்றத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.