
கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பாக பவுண்டரி அருகே பந்துகளை காப்பாற்றும் பீல்டர்களின் அதிநவீன முயற்சிகள், சில சமயங்களில் “ஸ்பைடர் மேன்” தோற்றத்தில் காணப்படுவதுண்டு. பவுண்டரி கோட்டைத் தாண்டி செல்லும் பந்தை அந்தரத்தில் தட்டிவிட்டு, பின்னர் பவுண்டரிக்குள் திரும்பி கேட்ச் பிடிப்பது தற்போது மிகவும் பரவலாகக் காணப்படுகிறது. இந்த வகையான கேட்ச்கள் “பன்னி ஹாப்” எனப்படும். இதுபோன்ற கேட்ச்களுக்கு இனி அவுட் வழங்கப்படாது என மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (MCC) புதிய மாற்றம் ஒன்றை அறிவித்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு பிக் பாஷ் லீக்கில் ஆடிய மைக்கேல் நெசர், பவுண்டரி வெளியே இருமுறை பந்தை அந்தரத்தில் தட்டிவிட்டு கேட்ச் பிடித்ததையடுத்து, இதுபோன்ற கேட்ச்கள் குறித்து சர்ச்சைகள் கிளம்பின. அப்போது விதிபடி இது செல்லுபடியாக இருந்தாலும், பலர் இதை நியாயமற்ற செயல் என கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து MCC புதிய விதி ஒன்றை உருவாக்கியுள்ளது.
புதிய விதி (சட்டம் 19.5.2) படி, பவுண்டரிக்கு வெளியே பந்தை ஒரு முறை மட்டும் அந்தரத்தில் தொட்ட பீல்டர், அதனையடுத்து பவுண்டரிக்குள் முழுமையாக தரையிறங்க வேண்டும். மீண்டும் அவர் பந்தை அந்தரத்தில் தொட்டால் அல்லது பவுண்டரிக்கு வெளியே குதித்தால், அது சிக்ஸராகக் கருதப்படும். இது ரிலே கேட்ச்களுக்கும் பொருந்தும். இந்த புதிய விதி ஜூன் 17, 2025 முதல், ICC போட்டிகளில் அமலுக்கு வருகிறது. மேலும் MCC விதிகளில் இது அக்டோபர் 2026 முதல் நிரந்தரமாக சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.